பழனியில் விவசாயி காரில் திடீர் தீ

பழனியில் விவசாயியின் கார் திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பழனியில் விவசாயி காரில் திடீர் தீ
Published on

பழனி அருகே உள்ள பூலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துச்சாமி (வயது 54). விவசாயி. இன்று இவர், பழனி அடிவாரம் பகுதியில் நடந்த உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சியில் கலந்துகொள்ள குடும்பத்துடன் காரில் பழனி வந்தார். பின்னர் அடிவாரம் அய்யம்புள்ளி சாலையில் காரை நிறுத்திவிட்டு, அந்த பகுதியில் உள்ள மண்டபத்துக்கு சென்று விட்டார்.

இந்நிலையில் காரின் முன்பகுதியில் திடீரென தீப்பிடித்து புகை வெளியே வந்தது. சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீ பரவ தொடங்கியது. இதைக்கண்டதும் அப்பகுதியினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அவர்களால் அணைக்க முடியவில்லை.

பின்னர் பழனி தீயணைப்பு நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புபடை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து காரில் பற்றிய தீயை அணைத்தனர். இந்த விபத்தில் காரின் முன்பகுதி சேதம் அடைந்தது. இதுகுறித்து தீயணைப்பு துறையினர் கூறும்போது, கார் என்ஜின் பகுதியில் உள்ள பேட்டரியில் மின்வயர் உரசி தீப்பற்றி இருக்கலாம் என்றனர். விவசாயி கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com