ஸ்ரீபெரும்புதூரில் கார்-லாரி மோதல்; இளம்பெண் பலி - 5 பேர் படுகாயம்

ஸ்ரீபெரும்புதூரில் கார் மீது லாரி மோதிய விபத்தில் இளம்பெண் பலியானார். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.
ஸ்ரீபெரும்புதூரில் கார்-லாரி மோதல்; இளம்பெண் பலி - 5 பேர் படுகாயம்
Published on

சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி ஜோதிகா, மகள் சோபிகா மற்றும் சென்னை வடபழனி பகுதியை சேர்ந்தவர் அஸ்வின். இவரது மனைவி சாதிகா, மகள் காருன்யா ஆகிய 6 பேரும் காரில் ஏலகிரிக்கு சுற்றுலா சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது ஸ்ரீபெரும்புதூர் அருகே இருங்காட்டுக்கோட்டை பகுதியில் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செல்லும்போது எதிரே வந்த கன்டெய்னர் லாரி கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் லாரியை அங்கேயே விட்டு விட்டு தப்பி சென்றார்.

இந்த விபத்து குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விபத்தில் படுகாயமடைந்த 6 பேரையும் மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் 28 வயதான சோபிகா சிகிச்சை பலனில்லாமல் இறந்தார்.

படுகாயமடைந்த 5 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படுத்தி தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com