

நெல்லை,
திசையன்விளை மன்னராஜா கோவில் தெருவைச் சேர்ந்த சுஜின் (25), திசையன்விளை–சாத்தான்குளம் செல்லும் எம்.எல்.தேரி சாலையில் கார் கேரேஜ் மற்றும் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் வழக்கம்போல் பணிகளை முடித்து ஒர்க்ஷாப்பை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றிருந்தார். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள், ஒர்க்ஷாப் முன்பு நிறுத்தப்பட்டிருந்த சுஜினுக்கு சொந்தமான காருக்கு தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த திசையன்விளை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், கார் முழுவதுமாக தீயில் எரிந்து சேதமடைந்தது.
தகவலறிந்து திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் எழில் சுரேஷ்சிங், சப்-இன்ஸ்பெக்டர்கள் அபினேஷ் மற்றும் ராமநாதன் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் முன்விரோதம் காரணமாக நடைபெற்றதா என்ற கோணத்திலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காருக்கு தீ வைத்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.