

தூத்துக்குடி,
திருச்சி ஏர்போர்ட் பசுமணிநகரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் அசோக்குமார் (வயது 37). இவர் தனது குடும்பத்தினர் 4 பேருடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார். சாமி தரிசனத்தை முடித்துவிட்டு, மீண்டும் திருச்சிக்கு செல்வதற்காக தூத்துக்குடி வழியாக காரில் சென்று கொண்டிருந்தனர்.
தூத்துக்குடி-திருச்செந்தூர் பிரதான சாலையில், முத்தையாபுரம் அருகே உள்ள லாரிகள் எடை போடும் நிலையம் அருகே கார் சென்று கொண்டிருந்தது. அப்போது காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவே இருந்த தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான மின் கம்பத்தில் பலமாக மோதியது.
மோதிய வேகத்தில் மின் கம்பம் அடியோடு சாய்ந்து காரின் மீது விழுந்தது. இருப்பினும், காரில் இருந்த 4 பேரும் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மின் கம்பம் சாய்ந்ததால் அந்த பகுதியில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த மின்வாரிய அதிகாரிகள், உடனடியாக மின் இணைப்பை துண்டித்து சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.