ஆட்டோ மீது சரக்கு வேன் மோதல்; சென்னை தம்பதி உள்பட 3 பேர் பலி

ஆட்டோ மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் சென்னையை சேர்ந்த தம்பதி உள்பட 3 பேர் பலியாகினர்.
ஆட்டோ மீது சரக்கு வேன் மோதல்; சென்னை தம்பதி உள்பட 3 பேர் பலி
Published on

தேனி,

சென்னை அடையாறு பகுதியை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 69). இவரது மனைவி சந்திரிகா (61). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் சென்னையில் வசித்து வருகின்றனர். மேலும் தேனி மாவட்டம் காமக்காப்பட்டியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் கமலக்கண்ணனுக்கு சொந்தமான வீடு ஒன்று உள்ளது.

இந்த வீட்டிற்கு அவ்வப்போது கமலக்கண்ணன் தனது குடும்பத்துடன் வந்து செல்வது வழக்கம். அதன்படி கமலக்கண்ணனும், அவரது மனைவி சந்திரிகாவும் காமக்காப்பட்டிக்கு செல்ல முடிவு செய்து நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து பஸ்சில் வத்தலக்குண்டு சென்றனர். பின்னர் மற்றொரு பஸ்சில் காட்ரோடு பிரிவுக்கு சென்றனர். அங்கிருந்து காமக்காப்பட்டி ரிசார்ட்டுக்கு செல்வதற்காக ஆட்டோ ஒன்றை சவாரிக்காக அழைத்தனர். அதன்படி கெங்குவார்பட்டி அக்ரஹார படித்துறை தெருவை சேர்ந்த அருள்குமார் (வயது 35) என்பவரது ஆட்டோவில் கமலக்கண்ணனும், அவரது மனைவியும் சென்றனர்.

3 பேர் பலி

வத்தலக்குண்டு-கொடைக்கானல் சாலையில் கெங்குவார்பட்டி கம்பெனி பிரிவு என்ற இடத்தில் ஆட்டோ சென்றபோது, எதிரே கொடைக்கானல் பூம்பாறையில் இருந்து காய்கறி ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று வந்தது. மேலும் அந்த வேனின் முன்னால் சைக்கிளில் கெங்குவார்பட்டியை சேர்ந்த அன்னசாமி (50) என்பவர் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த சைக்கிளின் மீது மோதாமல் இருக்க சரக்கு வேனின் டிரைவர், தனது வாகனத்தை திருப்பினார்.

இதில் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன், சைக்கிள் மீது உரசியபடி சென்றதுடன், எதிரே அருள்குமார் ஓட்டி வந்த ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் வந்த கமலக்கண்ணன், அவரது மனைவி சந்திரிகா, ஆட்டோ டிரைவர் அருள்குமார் ஆகிய 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். சைக்கிளில் வந்த அன்னசாமியும் கீழே விழுந்து காயமடைந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com