அறநிலையத்துறை டி.வி. தொடங்குவதை எதிர்த்து வழக்கு - ஐகோர்ட்டில் தீர்ப்பு தள்ளிவைப்பு

திருக்கோவில் என்ற பெயரில் அறநிலையத்துறை டி.வி. தொடங்குவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தோர்ப்பை நீதிமன்றம் தள்ளிவைத்தது.
அறநிலையத்துறை டி.வி. தொடங்குவதை எதிர்த்து வழக்கு - ஐகோர்ட்டில் தீர்ப்பு தள்ளிவைப்பு
Published on

சென்னை,

தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களில் நடைபெறும் விழாக்களை ஒளிபரப்புவதற்காக தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை சார்பில் திருக்கோவில் என்ற பெயரில் தனி டி.வி. ஒன்றை தொடங்க முடிவு செய்யப்பட்டது இதற்காக ரூ.8.75 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த அரசாணை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், இந்து சமய அறநிலையத்துறையின் பொதுநல நிதியை கொண்டு டி.வி. தொடங்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், அனிதா சுமந்த் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், பொதுநல நிதியில் இருந்து கோவில்களை சீரமைக்கும் பணிகளுக்கு மட்டுமே செலவிட முடியும். இதுபோல டி.வி. தொடங்குவதற்கு செலவு செய்ய முடியாது. ஒருவேளை டி.வி. தொடங்குவதாக இருந்தால், அதுகுறித்து மக்களின் கருத்து கேட்க வேண்டும் என்று வாதிட்டார்.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளீடர் கார்த்திகேயன், திருக்கோவில் டி.வி. தொடங்குவது அரசின் கொள்கை முடிவாகும். கோவில்களின் நிதியுதவியை வழங்குவதாக இருந்தால் மட்டுமே கருத்து கேட்க வேண்டும். எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com