வங்கி மேலாளரை தாக்கிய வழக்கு: மு.க.அழகிரி மகள் கைதாகி விடுதலை

சென்னையில் வங்கி மேலாளரை தாக்கிய வழக்கில் மு.க.அழகிரி மகள் கயல்விழி கைது செய்யப்பட்டார்.
வங்கி மேலாளரை தாக்கிய வழக்கு: மு.க.அழகிரி மகள் கைதாகி விடுதலை
Published on

சென்னை,

சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் மு.க.அழகிரியின் மகள் கயல்விழிக்கு சொந்தமான வணிக வளாக கட்டிடத்தில் எஸ்.பி.ஐ. வங்கி கிளை இயங்கி வருகிறது. இந்த கட்டிடத்தில் கடந்த 20-ந்தேதி அன்று 'லிப்ட்' பழுதானது. இதனால் வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்கள் அவதி அடைந்ததால் வங்கியின் கிளை மேலாளர் ஹர்ஷீன் சிங், கயல்விழியின் உதவியாளரை தொடர்பு கொண்டு கண்டித்தார்.

இதைத்தொடர்ந்து கயல்விழி வங்கிக்கு வந்தார். அப்போது அவர் ஆத்திரத்தில் வங்கி மேலாளர் ஹர்ஷீன் சிங்கின் கன்னத்தில் 'பளார்' என்று ஓங்கி அறைந்தார். இந்த சம்பவம் வங்கி மேலாளர் அறையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. அதன் அடிப்படையில் கயல்விழி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வங்கியின் முதன்மை மேலாளர் நமச்சிவாயம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

அதன்பேரில் கயல்விழி மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் சாஸ்திரி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் போலீசார் அனுப்பிய சம்மன் அடிப்படையில் சாஸ்திரி நகர் போலீஸ் நிலையத்தில் கயல்விழி நேற்று மதியம் 1 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகினார். அவரிடம் மாலை 4 மணி வரை விசாரணை நடைபெற்றது. விசாரணை விவரம் வீடியோ கேமராவில் பதிவு செய்யப்பட்டது.

விசாரணை முடிவில் அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் அவர் போலீஸ் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதன் பின்னர் கயல்விழி போலீஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றார். கயல்விழி மீது கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com