தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு - அமைச்சர் என்.ஆனந்த் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

மொத்தம் 5 தேர்தல் வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தன.
தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு - அமைச்சர் என்.ஆனந்த் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

சட்டமன்ற தேர்தலில் சென்னை தி.நகர் தொகுதியில் த.வெ.க. சார்பில் போட்டியிட்ட என்.ஆனந்த், அ.தி.மு.க. வேட்பாளர் தி.நகர் சத்யாவை 13,200 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து அந்த தொகுதி வாக்காளர் பாலசுப்பிரமணிய சர்மா என்பவர் ஒரு தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

இதே போல், ஆலங்குளம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மனோஜ் பாண்டியனின் வெற்றியை எதிர்த்து, அந்த தொகுதியை சேர்ந்த த.வெ.க. வேட்பாளர் விபின் சக்கரவர்த்தி, வாக்காளர்கள் இசக்கி ராஜா மற்றும் பத்மநாதன் ஆகியோர் தனித்தனியாக தேர்தல் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளில் சில குறைபாடுகள் இருந்ததால் அதை சரி செய்வதற்கு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் அவகாசம் வழங்கியிருந்தார்.

இதற்கிடையில், மானாமதுரை தொகுதியில் த.வெ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இளங்கோவனின் வெற்றியை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் தமிழரசி ஒரு தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்தார். இவ்வாறாக மொத்தம் 5 தேர்தல் வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தன.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி, இந்த தேர்தல் வழக்குகள் தொடர்பாக 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று அமைச்சர் என்.ஆனந்த், தி.மு.க. எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன், இந்திய தேர்தல் ஆணையம் ஆகிய தரப்புகளுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com