

சென்னை,
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் விராலிமலை தொகுதியில் சி.விஜயபாஸ்கர், கரூர் தொகுதியில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றனர். பின்னர், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்த இவர்கள், ஆளும் கட்சியான த.வெ.க.வில் இணைந்தனர். இவர்களது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக் கொண்டார்.இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அ.தி.மு.க., கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி வழக்கு தொடர்ந்துள்ளார்.அதில், ‘‘கட்சி கொறடா உத்தரவை மீறி த.வெ.க.அரசு கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர் என்பதற்காக இவர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சபாநாயகரிடம் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகார் நிலுவையில் இருக்கும்போது, இருவரது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக் கொண்டது தவறானது. சபாநாயகர், மனதை செலுத்தாமல் எந்திரத்தனமாக முடிவெடுத்துள்ளதால், இந்த விவகாரத்தில் ஐகோர்ட்டு தலையிட வேண்டும். சபாநாயகரின் முடிவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இந்த மனு மீது இறுதி முடிவு எடுக்கும் வரை விராலிமலை மற்றும் கரூர் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்ட விவகாரத்தில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர், சட்டமன்ற செயலாளர், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும்.
ஏற்கனவே நான்கு எம் எல்.ஏக்கள் ராஜினாவை ஏற்றதை எதிர்த்த தொடரப்பட்ட வழக்குகளுடன், இந்த இரு வழக்குகளையும் சேர்த்து விசாரணைக்கு ஐகோர்ட்டு பதிவுத்துறை பட்டியலிடவேண்டும். விசாரணையை வருகிற 22-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்’’ என்று உத்தரவிட்டனர்.