அரசு முதியோர் இல்லம் அமைக்கக்கோரி வழக்கு: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்

அனைத்து மாவட்டங்களிலும் அரசு முதியோர் இல்லம் அமைக்கக்கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவுக்கு பதில் அளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
அரசு முதியோர் இல்லம் அமைக்கக்கோரி வழக்கு: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்
Published on

சென்னை,

பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு, பாதுகாப்பு சட்டத்தின்படி, மாநில அரசு தேவையான முதியோர் இல்லங்களை உருவாக்க வேண்டும். குறைந்தபட்சமாக மாவட்டத்துக்கு ஒரு முதியோர் இல்லமாவது அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் அப்படி மாவட்டந்தோறும் முதியோர் இல்லங்களை அரசு அமைக்கவில்லை. இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேள்வி எழுப்பியபோது அதற்கு பதில் அளித்த அரசு, முதியோர் இல்லங்களை அரசு நேரடியாக நடத்தவில்லை என்றும், முதியோர் இல்லங்களுக்கு மானியம் மட்டும் வழங்கிவருவதாகவும் கூறியுள்ளது.

எங்கும் இல்லை?

இதன் மூலம், சட்ட விதிகளை அமல்படுத்த அரசு தவறிவிட்டது என்று தெரிகிறது. எனவே, சட்டப்படி மாவட்டந்தோறும் அரசு முதியோர் இல்லங்களை அமைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், 'தமிழ்நாட்டில் எந்த மாவட்டங்களில் அரசு முதியோர் இல்லங்கள் இல்லை?' என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, 'ஒரு மாவட்டத்தில்கூட அரசு முதியோர் இல்லம் இல்லை' என்று மனுதாரர் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

எச்சரிக்கை

அதையடுத்து, 'ஒரு மாவட்டத்தில்கூட அரசு முதியோர் இல்லம் இல்லை என்ற மனுதாரர் தரப்பு வாதத்தில் தவறு என தெரியவந்தால், மனுதாரருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என நீதிபதிகள் எச்சரித்தனர்.

பின்னர், மனுவுக்கு பதில் அளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com