

மேற்கு ஆசியா போர் பதற்றம் காரணமாக இந்தியா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே வீட்டில் இருந்தே பணி செய்தல் உள்ளிட்ட பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு பரிந்துரைத்தார்.இதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு வாரத்தில் 2 நாட்கள் ஆன்லைன் (காணொலி) மூலம் வழக்கு விசாரணையை நடத்துகிறது.
இந்த நிலையில் டெல்லியில் உள்ள கோர்ட்டுகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் வழக்கு விசாரணை நடத்த அறிவுறுத்தக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இது குறித்து தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் நேற்று வக்கீல் ஒருவரும் குறிப்பிட்டார்.அதற்கு தலைமை நீதிபதி,"நான் ஏற்கனவே ஐகோர்ட்டுகளில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஆன்லைன் மூலம் வழக்கு விசாரணை செய்யுமாறு அனைத்து தலைமை நீதிபதிகளிடமும் அறிவுறுத்தி இருக்கிறேன். அதை ஏற்று பல கோர்ட்டுகள் ஏற்கனவே அதை அமல்படுத்தி விட்டன"என பதிலளித்தார்.
.மாவட்ட கோர்ட்டுகள் அனைத்தும் ஐகோர்ட்டுகளின் நிர்வாகத்தின் கீழ் வருவதாக கூறிய தலைமை நீதிபதி, அது குறித்து அவர்கள் முடிவு எடுப்பார்கள் எனவும், இது குறித்தும் ஏற்கனவே ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகளிடம் தெரிவித்து விட்டேன் என்றும் கூறினார்