ராணுவ ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடித்துள்ள கொரோனா மருந்தை விற்பனைக்கு கொண்டுவரக்கோரி வழக்கு

இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கண்டுபிடித்துள்ள கொரோனா மருந்தை விற்பனைக்கு கொண்டுவர கோரிய மனுவுக்கு மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ராணுவ ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடித்துள்ள கொரோனா மருந்தை விற்பனைக்கு கொண்டுவரக்கோரி வழக்கு
Published on

சென்னை,

கொரோனா தொற்றை குணப்படுத்தும் வகையில் 2 டி.ஜி. எனும் மருந்தை, இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கண்டு பிடித்துள்ளது. அதை விற்பனைக்கு கொண்டு வரக்கோரி சென்னையைச் சேர்ந்த சரவணன் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், டி.வி.தமிழ்செல்வி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், அனைத்து சோதனைகளும் முடிவடைந்த நிலையில், ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு மட்டும் இந்த மருந்து உற்பத்திக்கு அனுமதியளித்துள்ளது.

இதை மத்திய மந்திரி, கடந்த மே மாதமே, விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளார். தினந்தோறும் கொரோனா மரணங்கள் நிகழ்ந்து வருவதால் இந்த மருந்தை விரைந்து விற்பனைக்கு கொண்டுவர உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.

மத்திய அரசின் கருத்து

மத்திய அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த மருந்துக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்த போதும், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியது உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசின் கருத்தை கேட்டு தெரிவிக்கிறேன் என்றார்.

இதையடுத்து, கொரோனாவுக்கு உலக நாடுகளின் விஞ்ஞானிகள், மருந்து கண்டுபிடிக்க முயற்சித்து வரும் நிலையில், தற்போது கண்டுபிடித்துள்ள மருந்தை, பிற நிறுவனங்களும் உற்பத்தி செய்ய அனுமதியளித்து, விற்பனைக்கு கொண்டு வந்தால்தான், கொரோனா 3-வது அலையை நாம் எதிர்கொள்ள முடியும் என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கிற்கு இன்று (வெள்ளிக்கிழமை) மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com