

மதுரையைச் சேர்ந்த கண்ணம்மாள், மதுரை கூடுதல் மகளிர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
எனக்கும் பால்பாண்டி என்பவருக்கும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது. நாங்கள் எனது மாமனார், மாமியாருடன் கருப்பாயூரணி பகுதியில் கூட்டுக்குடும்பமாக வசித்தோம். சில மாதங்களில் எனது கணவர் மதுஅருந்திவிட்டு போதையில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டார். நான் கருவுற்றநிலையில் வீட்டுவேலைகள் அனைத்தையும் செய்ய கணவர் வீட்டினர் கட்டாயப்படுத்தினர்.
இதில் எனது வயிற்றில் வளர்ந்த கரு கலைந்துவிட்டது. ஜல்லி, மணல் விற்பனை செய்யும் தொழிலுக்காக எனது பெற்றோரிடம் ரூ.5 லட்சம் வாங்கி வர கணவர் வீட்டார் வற்புறுத்தினார்கள். அந்த தொழிலில் ஈடுபட்டாலும், என்னை கூலித்தொழிலாளியாக நடத்தினார்கள். மீண்டும் கருவுற்ற போதும் கடுமையான வேலைகளில் ஈடுபட்டதால் கரு கலைந்தது.
அடிமையைப்போல தொடர்ந்து தொல்லை கொடுத்ததால் எனது உயிருக்கு பாதுகாப்பில்லை என கருதி, பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டேன். திருமணத்தின்போது அளித்த 15 பவுன் நகை, திருமண செலவு மற்றும் இழப்பீடு ரூ.5 லட்சமும், மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் ஜீவனாம்சமும் வழங்க கணவர் வீட்டாருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி முத்துலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது.
முடிவில், மனுதாரருக்கு அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் ரூ.5 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும். மாதந்தோறும் ரூ.5 ஆயிரத்தை ஜீவனாம்சமாக அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.