‘டிக்டாக்’ பதிவு வெளியிட்டதால் வன்கொடுமை வழக்கு: சரணடைபவரின் ஜாமீன் மனுவை உடனே விசாரிக்க வேண்டும் - கடலூர் கோர்ட்டுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

டிக்டாக் பதிவு வெளியிட்டதால் வன்கொடுமை வழக்கில் சரணடைபவரின் ஜாமீன் மனுவை உடனே விசாரிக்க வேண்டும் என்று கடலூர் கோர்ட்டுக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
‘டிக்டாக்’ பதிவு வெளியிட்டதால் வன்கொடுமை வழக்கு: சரணடைபவரின் ஜாமீன் மனுவை உடனே விசாரிக்க வேண்டும் - கடலூர் கோர்ட்டுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவர் டிக்டாக்கில் ஒரு பதிவை வெளியிட்டார். இதையடுத்து அவர் மீது கடலூர் மாவட்டம், ராமநத்தம் போலீசார் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் சரணடைந்த அதே நாளில் தன்னுடைய ஜாமீன் மனுவை விசாரணைக்கு எடுத்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க கடலூர் மாவட்ட செசன்சு கோர்ட்டுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் சக்திவேல் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதி எம்.கோவிந்தராஜ் விசாரித்தார். அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வக்கீல் டி.சண்முகராஜேஸ்வரன், புகார்தாரருக்கு நோட்டீஸ் கொடுக்காமல், ஜாமீன் மனுவை விசாரிக்க சட்டத்தில் வழியில்லை என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டவர் முன்ஜாமீன் பெற முடியாது. ஜாமீன் மனு மீதான விசாரணையின் போதும், பாதிக்கப்பட்ட புகார்தாரரின் கருத்தையும் கேட்கவேண்டும். தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவும் காலமாக உள்ளதால்,

இந்த ஊரடங்கின்போது பாதிக்கப்பட்டவரை கோர்ட்டுக்கு அழைப்பது என்பது அவரது உடல் நலத்துக்கு தீங்கு விளைவிப்பதாகும். எனவே, மனுதாரர் ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது பாதிக்கப்பட்டவருக்கு நோட்டீஸ் வழங்க விலக்கு அளிக்கப்படுகிறது. மனுதாரர் சரணடைந்த நாளிலேயே அவரது ஜாமீன் மனுவை விசாரணைக்கு எடுத்து அன்றே சட்டப்படியான தகுந்த உத்தரவை கடலூர் மாவட்ட செசன்சு கோர்ட்டு நீதிபதி பிறப்பிக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com