

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் களம் அனல் பறக்கும் வகையில் அமைந்துள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது தொகுதிகளில் வீதி வீதியாக நடந்து சென்றும், பிரசார வாகனத்தில் சென்றும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், போடி தாலுகா அம்மாபட்டியில் உள்ள சுந்தரராஜபுரம் பகுதியில் போடி தொகுதி தி.மு.க. வேட்பாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்தும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேர்தல் பறக்கும் படை அலுவலர் நவநீத பாண்டியன் போடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் எம்.பி. ரவீந்திர நாத், கட்சி நிர்வாகிகள் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.