நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை தொடர்பான வழக்கு; என்.எல்.சி.யை எதிர்மனுதாரராக சேர்க்க ஐகோர்ட்டு உத்தரவு

என்.எல்.சி. தரப்பைக் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றும் ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை தொடர்பான வழக்கு; என்.எல்.சி.யை எதிர்மனுதாரராக சேர்க்க ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் உரிமையாளர்களுக்கு போதுமான இழப்பீடும், உறுதியளித்தபடி குடும்ப உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்படவில்லை என என்.எல்.சி. நிலம் கையகப்படுத்தலால் பாதிக்கப்பட்டோர் நலச்சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அந்த மனுவில் நில உரிமையாளர்களின் மறுவாழ்வுக்கு தமிழக அரசு எந்த திட்டத்தையும் வகுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்ட விதிகளின்படி இழப்பீடு, மறுவாழ்வு, மறுகுடியமர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை முடிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன், நீதிபதி ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் தமிழக அரசும், மாவட்ட கலெக்டரும் மட்டுமே எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், என்.எல்.சி. தரப்பைக் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றும் தெரிவித்த நீதிபதிகள், என்.எல்.சி.யை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு, மனு மீதான விசாரணையை செப்டம்பர் 4-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com