ரோடு ஷோ, அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க கோரிய வழக்கு: ஐகோர்ட்டில் இன்று தீர்ப்பு

கோப்புப்படம்
தமிழ்நாடு அரசு அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி, வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டது.
சென்னை,
கரூரில் த.வெ.க. விஜய் கலந்துக் கொண்ட கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ரோடு ஷோ உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளுடன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு, ரோடு ஷோ உள்ளிட்ட அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக்கோரி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது.இதன்படி, தமிழ்நாடு அரசு அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி, வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கியது. இந்த வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
இதில் அரசு விதித்துள்ள நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் ஜனநாயகத்துக்கு விரோதமாக இருப்பதாக அ.தி.மு.க.வும், த.வெ.க.வும் பதில் மனுக்களை தாக்கல் செய்தன. பின்னர் இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் கொண்ட முதல் பெஞ்ச் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டது. இந்தநிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று (வெள்ளிக்கிழமை) நீதிபதிகள் பிறப்பிக்கின்றனர்.






