புழல் சிறையில் கைதிகளை சந்திக்கும் நேரத்தை அதிகரிக்கக்கோரி வழக்கு: சட்டப்பணி ஆணைக்குழு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

வக்கீல்களுடன் ஆலோசனை செய்து சட்டப்பணி ஆணைக்குழு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புழல் சிறையில் கைதிகளை சந்திக்கும் நேரத்தை அதிகரிக்கக்கோரி வழக்கு: சட்டப்பணி ஆணைக்குழு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
Published on

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் எம்.தமிழழகன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ''புழல் மத்திய சிறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சட்ட ரீதியாக உதவி வழங்குவதற்கான வசதிகள் மிகவும் குறைவாக உள்ளது. கைதிகள் சட்டநிவாரணம் பெற வக்கீல்களை சந்திக்க குறைவான நேரம் தரப்படுகிறது.

அரை மணிநேரத்தில் 5 கைதிகளை வக்கீல்கள் சந்திக்க வேண்டிய நிலை உள்ளதால், சட்டரீதியான ஆலோசனைகளை வழங்க முடியவில்லை. இதனால், கைதிகளின் அடிப்படை உரிமை பாதிக்கப்படுகிறது. எனவே, வக்கீல்களை சந்திக்கும் பார்வையாளர்களின் நேரத்தை அதிகரிக்க உத்தரவிடவேண்டும்'' என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் எஸ்.நதியா ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள், ‘‘இந்த வழக்கில் சட்டப்பணி ஆணையக்குழு உறுப்பினர் செயலரை எதிர்மனுதாரராக தாமாக முன்வந்து சேர்க்கிறோம். அவர், மனுதாரரின் கோரிக்கை குறித்து வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்'' என்று உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளிவைத்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com