காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தக் கோரிய வழக்கு - தலைமைச் செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தக் கோரிய வழக்கில் தலைமைச் செயலாளர் பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தக் கோரிய வழக்கு - தலைமைச் செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
Published on

சென்னை,

சென்னை பாலவாக்கத்தைச் சேர்ந்த நிஜாமுதீன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அவர் அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது;-

விசாரணை கைதிகள் காவல்நிலையத்திற்குள் கடுமையாக தாக்கப்படுவது, தங்கள் அதிகாரத்தை மீறி காவல்துறையினர் செயல்படுவது என மனித உரிமை மீறல்கள் காவல்நிலையங்களில் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதற்கு காவல்நிலையங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவது அவசியம். மேலும் காவல் நிலையத்திற்குள் நடக்கும் குற்றங்களை மறைக்க கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் நீக்கி விடுவதும் நடக்கிறது.

எனவே காவல்நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதோடு, அதை முறையாக பராமரிப்பதற்கும், கேமராவில் பதிவாகும் காட்சிகளை காவல்துறையினர் அழிக்காமல் பாதுகாத்து வைப்பதற்கு தேவையான திட்டங்களையும், விதிகளையும் உருவாக்கவும் உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் நிலையத்தில் இருந்த கேமரா பதிவுகள் அழிக்கப்பட்டிருந்ததையும் மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இன்று இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வு, இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் தமிழக டி.ஜி.பி. ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com