

விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் சிந்தாமணி அருகே தேசியமயமாக்கப்பட்ட வங்கி இயங்கி வருகிறது. இங்கு காசாளராக பணிபுரிந்து வந்த முகேஷ் என்ற நபர், வங்கியில் இருந்து 43 லட்சம் ரூபாய் பணத்தை திருடிவிட்டு மாயமானார்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விழுப்புரம் பேருந்து நிலையம் அருகே முகேஷை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், முகேஷ் ஆன்லைன் சூதாட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததும், அதில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் வங்கியில் இருந்து பணத்தை திருடிச் சென்றதாகவும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து முகேஷிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.