நெல்லையில் சாதி ரீதியாக பேருந்து நிலையத்தில் மாணவர்கள் மோதல்: 10-க்கும் மேற்பட்டோர் கைது

கைது செய்யப்பட்ட அனைவரும் 16 முதல் 17 வயதுடைய சிறார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
பிளஸ்-2 மாணவரை கட்டையால் அடித்த சக மாணவன் கைது.
நெல்லை
Published on

நெல்லை,

சாதி ரீதியாக நெல்லை பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட மோதலில் 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாணவர்களிடையே மோதல்

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் தினமும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் பேருந்துக்காக காத்திருப்பது வழக்கம். இந்த நிலையில், தச்சநல்லூர், கரிசல்குளம், பிராஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களில் சிலர் இன்ஸ்டாகிராமில் சாதி ரீதியான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பகிர்ந்துள்ளனர்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த முன்விரோதம் காரணமாக பேருந்து நிலையத்தில் மாணவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், அது கைகலப்பாக மாறியது.

விசாரணை

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இது குறித்து நெல்லை சந்திப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மோதலில் ஈடுபட்ட மாணவர்களை மடக்கி பிடித்தனர். சிலர் அங்கிருந்து தப்பி சென்ற நிலையில், 10-க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீசார் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் 16 முதல் 17 வயதுடைய சிறார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், மோதலுக்கான காரணம் மற்றும் இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தொடர்ந்து நெல்லை சந்திப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com