கோவில் திருவிழாக்களில் சாதி பெயர்; அறநிலையத்துறை சுற்றறிக்கைக்கு இடைக்காலத் தடை

அறநிலையத்துறை ஆணையரின் சுற்றறிக்கைக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மதுரை,
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் கோவிலில் பல ஆண்டுகளாக உள்ள நடைமுறையை பின்பற்றி பங்குனி திருவிழா அழைப்பிதழில் மண்டகப்படிதாரர்களின் பெயர்களை அச்சிட உத்தரவிட வேண்டும் என்றும், அறநிலையத்துறை ஆணையரின் சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும், மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஆறுமுக நயினார் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அம்பாசமுத்திரம் காசிநாத சுவாமி கோவில் மற்றும் பாபநாசம் சுவாமி கோவில் பங்குனி திருவிழா அழைப்பிதழில் மண்டகப்படிதாரர்களின் பெயர்களை குறிப்பிடக்கூடாது என செயல் அலுவலர் வாய்மொழியாக அறிவுறுத்தியுள்ளார் என்றும், அனைத்து கோவில்களிலும் அதை பின்பற்ற பொதுவான உத்தரவை கோர்ட்டு பிறப்பிக்காத நிலையில், அதை தவறாகப் புரிந்துகொண்டு ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார் என்றும் மனுதாரர் கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதி ஜெ.நிஷா பானு, நீதிபதி எஸ்.ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், அறநிலையத்துறை சுற்றறிக்கைக்கு 4 வாரங்கள் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். இந்த வழக்கு குறித்து அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.