சாதிவாரி கணக்கெடுப்பு: எடப்பாடி பழனிசாமி வரவேற்பு

சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என அறிவித்த பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சாதிவாரி கணக்கெடுப்பு: எடப்பாடி பழனிசாமி வரவேற்பு
Published on

சென்னை,

இந்தியாவில் கடைசியாக 1931ம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பின்னர், 2011ம் ஆண்டில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் சாதி விவரமும் சேர்க்கப்பட்டது. ஆனால், அதன் தரவுகள் வெளியிடப்படவில்லை.

2021ல் நடத்தப்பட வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு கொரோனாவல் தள்ளிப்போன நிலையில், இனி நடத்தப்பட உள்ள அந்த கணக்கெடுப்பில் சாதி விவரமும் சேர்க்கப்படும் என மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது. காங்கிரஸ், திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்றுள்ளது மத்திய அரசு.

இந்தநிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என அறிவித்த மத்திய அரசுக்கு தமிழக எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வரவேற்றுள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-

தமிழ்நாடு மக்கள் பல ஆண்டுகளாக மத்திய அரசிடம் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். ஏற்கனவே முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அரசு இருக்கும்பொழுது, தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டபிறகு வந்த திமுக அரசு அதை கைவிட்டுவிட்டது.

தற்போது மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போதே சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்று அறிவித்திருப்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். சுமார் 93 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை மனதார வரவேற்கிறேன்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் அறிவித்த இந்தியப் பிரதமர் மோடி, அமித்ஷா அவர்களுக்கும் அதிமுக சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com