

சென்னை,
சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சில தனியார் பால் பொருட்களில் கலப்படம் இருப்பது பரிசோதனை அறிக்கையின் மூலம் தெரியவந்து இருப்பதாக தெரிவித்துள்ளார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாவது:- தனியார் பால் பவுடரில் காஸ்டிக் சோடாவும் பிளிச்சிங் பவுடரும் கலந்திருப்பதாக பரிசோதனை அறிக்கையில் கிடைத்துள்ளது.
கலப்பட பால் பவுடர் மூலம் தயாரிக்கப்படும் பாலினால் குழந்தைகளுக்கு பல நோய்கள் வரும். ஆவின் பாலில் கலப்படம் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது; தாய் பாலுக்கு நிகரானது ஆவின் பால். கலப்பட பாலில் ஆபத்தான ரசாயனங்கள் உள்ளது. ஆவின் பால் பொருட்களின் விற்பனை தற்போது அதிகரித்துள்ளது.
முதல்வரிடம் பால் விவகரம் தொடர்பாக ஏற்கனவே பேசிவிட்டேன். என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை காத்திருந்து பாருங்கள். பிரபல தனியார் நிறுவனங்கள் கலப்படத்தில் ஈடுபடுவதை அம்பலப்படுத்தவே சோதனை நடத்தப்பட்டது. ஆய்வு முடிவுகள் முழுமையாக வந்தால் மேலும் சில நிறுவனங்கள் சிக்கும். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திவிட்டேன்.
மக்கள்தான் விழிப்புடன் இருக்கவேண்டும். சில தனியார் நிறுவனங்கள் மட்டுமே கலப்படம் செய்கின்றன. முதல்வரிடம் பேசி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் என்னிடம் இருந்தால் உடனே கலப்பட பாலுக்கு தடை விதிப்பேன். பாலில் கலப்படம் செய்வோருக்கு கூடுதல் தண்டனை வழங்குவது குறித்து தமிழக அரசு ஆலோசனை செய்து வருகிறது.
தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதலும், விற்பனையும் அதிகரிக்கப்படும். தனியார் மற்றும் ஆவின் நிறுவன பால் பொருட்களை சோதித்து பார்க்கலாம். நல்ல பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்இவ்வாறு அவர் தெரிவித்தார்.