

மணப்பாறை, ஆக.4-
மணப்பாறை நகராட்சி 23-வது வார்டுக்கு உட்பட்ட கல்லாத்துப்பட்டியில் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக கல்லாத்துப்பட்டிக்கு செல்லும் காவிரி குடிநீர் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகளுக்கு குறைந்த அளவே குடிநீர் செல்லும் நிலை உள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலையை துளைத்துக் கொண்டு வெளியேறும் நீர் அருவி போல் மாறி ஆர்ப்பறித்து கொட்டி அருகில் உள்ள வாரி வழியாக மணப்பாறை குளத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதன் காரணமாக தினமும் லட்சக்கணக்கான லிட்டர் காவிரி குடிநீர் யாருக்கும் பயனின்றி குளத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சாலையில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இனிமேலாவது இதனை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.