

திருச்சி,
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் திருச்சிக்கு வந்தது. கம்பரசம்பேட்டை தடுப்பணையில் சுற்றலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 78.37 அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1,500 கன அடி மட்டும் திறந்து விடப்படுகிறது. ஆனால் கடந்த வாரம் கர்நாடக மாநிலத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக அங்கிருந்து மேட்டூர் அணைக்கு 25 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டது.
இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர் மட்டம் உயர்ந்தது. இதனை தொடர்ந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பாக மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
அந்த தண்ணீர் தற்போது மாயனூர் தடுப்பணை, முக்கொம்பு மேலணையை தாண்டி திருச்சிக்கு நேற்று வந்து சேர்ந்தது. திருச்சி கம்பரசம் பேட்டை தடுப்பணையில் தண்ணீர் சீறிப்பாய்ந்து வருவதால் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த இளைஞர்களும் குளிப்பதற்காக தடுப்பணையில் குவிந்தனர்.