

புதுடெல்லி,
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை ஏற்று கர்நாடக அரசு காவிரி நீரை திறக்க உத்தரவிட வேண்டும் எனக்கோரி தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நிலை அறிக்கை தாக்கல் செய்தது.
அந்த அறிக்கையில், விகிதாச்சார அடிப்படையில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய பற்றாக்குறை நீரான 17.604 டி.எம்.சி. நீரை கர்நாடகா அரசு உடனடியாக திறக்க வேண்டும் என்ற உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த 15 நாட்களுக்கு 9,000 கன அடி நீரை தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்த நிலையில், கர்நாடக அரசு தற்போது வரை வெறும் 20 டி.எம்.சி. நீரை மட்டுமே திறந்து விட்டுள்ளதாகவும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி கர்நாடக அரசு காவிரியில் நீர் திறப்பதை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, காவிரி நீர் பங்கீடு வழக்கை வரும் செப்டம்பர் 15-ந்தேதிக்கு ஒத்திவைத்தது. மேலும், தற்போதைய நிலவரத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய இரு மாநில அரசுகளுக்கும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.