

பிராட்வே,
மதுரையில் உள்ள வக்பு வாரிய கல்லூரியில் உதவி பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டது.
முதல் கட்டமாக நேற்று முன்தினம் அ.தி.மு.க. எம்.பி.யும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான அன்வர்ராஜா வீடு அமைந்துள்ள ராமநாதபுரம் ஓம்சக்தி நகருக்கு சென்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அன்வர் ராஜாவிடமும் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
அதிரடி சோதனை
இந்த நிலையில் சென்னை பாரிமுனை மண்ணடி ஜாபர் சாரங் சந்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வக்பு வாரிய அலுவலகத்தில் உள்ள அன்வர் ராஜா அறையில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக இந்த சோதனை நீடித்தது.
வக்பு வாரிய அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்களை ஆய்வு செய்ததுடன், அங்கிருந்த ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் சி.பி.ஐ. அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.