அஜித்குமார் வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ. அதிகாரியை நோட்டமிட்டு கும்பல் பின்தொடருவதாக புகார்

மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
அஜித்குமார் வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ. அதிகாரியை நோட்டமிட்டு கும்பல் பின்தொடருவதாக புகார்
Published on

மதுரை,

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் 5 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை டெல்லியில் இருந்து வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து, மீண்டும் டெல்லி சென்றுள்ளனர். தற்போது மதுரையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பொறுப்பில் உள்ள அதிகாரி தொடர்ந்து விசாரித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு ஆட்டோ ஒன்றில் சிலர் கும்பலாக சி.பி.ஐ. அலுவலகம் பகுதிக்கு வந்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரம் அங்கேயே வலம் வந்த அவர்கள் திரும்பிச் சென்றுள்ளனர்.

இதுபோல் அவர்கள் 3 நாட்களுக்கு முன்பு மீண்டும் வந்துள்ளனர்.இதுபற்றி அந்த சி.பி.ஐ. அதிகாரி கண்டு கொள்ளவில்லை. ஆனாலும் நடந்த சம்பவம் குறித்து தங்களது மேல்அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துவிட்டு அலுவலகத்தில் இருந்து அரசு சுற்றுலா மளிகைக்கு சென்று தங்கி உள்ளார்.

ஆனால் அதே ஆட்டோவில் வந்த 4 பேர், அரசு சுற்றுலா மாளிகையில் வந்து நோட்டம் பார்த்துச் சென்றுள்ளனர். அதை அறிந்த அந்த சி.பி.ஐ. சப்-இன்ஸ்பெக்டர், போலீசில் புகார் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் ஆட்டோவில் வந்தவர்கள் அஜித்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள போலீஸ்காரர்களுக்கு வேண்டப்பட்டவர்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com