பெங்களூரு சிறை ஊழல் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்

பெங்களூரு சிறை ஊழல் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று மைத்ரேயன் எம்.பி. கூறினார்.
பெங்களூரு சிறை ஊழல் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்
Published on

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் அடுத்த முத்தியால்பேட்டையில் அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணி சார்பில் வரும் 23-ந் தேதி எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா மற்றும் செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான கால்கோள் விழா நடந்தது. மைத்ரேயன் எம்.பி. தலைமை தாங்கி பந்தகால் நட்டு தொடங்கிவைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறிதாவது:-

வரும் 23-ந் தேதி ஆடி அம்மாவாசை அன்று நடைபெறும் இந்த கூட்டம் திருப்புமுனை கூட்டமாக அமையும். குடியரசு தலைவர் தேர்தலுக்கு பிறகு பல மாற்றங்கள் வரும் என்று பரவலாக தமிழகத்தில் பேசப்படுகிறது.

கூவத்தூர் கட்சியின் இந்த சட்டமன்ற கூட்டத்தொடர்தான் கடைசியாக அமையும். அடுத்த சட்டமன்ற கூட்டத்தொடர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெறும். ஓ.பன்னீர்செல்வம் மக்களின் செல்வாக்கை பெற்றவர்.

கமல்ஹாசன் போன்ற பொதுவாழ்க்கையில் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் தங்களின் கருத்துகளை கூறலாம். ஏனென்றால் இது ஜனநாயக நாடு.

ஊழலுக்காக சிறை தண்டனை பெற்ற ஒருவர் அங்கு சொகுசாக வாழ்வதற்கு அங்கும் லஞ்சம் கொடுத்தது மிகப்பெரிய குற்றம். பெங்களூரு சிறை ஊழலை வெளிப்படுத்திய டி.ஐ.ஜி. ரூபாவை பணியிட மாற்றம் செய்தது மிகவும் தவறு. இந்த ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. வி.என்.பி.வெங்கட்ராமன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஆர்.வி.ரஞ்சித்குமார், ஜி.சம்பந்தம், புத்தளி ஞானசேகரன், வக்கீல் ஆர்.வி.உதயன், பிரேமா ரஞ்சித்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com