

தூத்துக்குடி,
தூத்துக்குடி தாளமுத்துநகர் ஜே.சி. நகரைச் சேர்ந்த சுந்தர்ராஜ் (வயது 63) என்பவர் நேற்று இரவு சாலையில் நடந்து சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் அவரை மிரட்டி செல்போனை பறித்து சென்றது. அதே கும்பல், தாளமுத்துநகர் முதல் தெருவைச் சேர்ந்த ஜெரால்ட் அலெக்சாண்டர்(60) என்பவரிடமும் செல்போனைப் பறித்துக் கொண்டு தப்பியது.
மேலும் கிருஷ்ணராஜபுரம் ரோட்டில் நடந்து சென்ற மற்றொரு நபரிடமும் அந்த கும்பல் கைவரிசை காட்டியுள்ளது. பறிக்கப்பட்ட 3 செல்போன்களின் மொத்த மதிப்பு ரூ.34 ஆயிரம் ஆகும். இந்த செல்போன் பறிப்பு சம்பவங்கள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், தாளமுத்துநகர் மற்றும் வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 3 இடங்களில் நடந்த இந்தத் தொடர் செல்போன் பறிப்புச் சம்பவங்கள் தூத்துக்குடி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.