மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிவு 2027 ஏப்ரல் மாதம் வெளியீடு: டிஜிட்டல் முறையில் தரவுகள் சேகரிப்பு

கடைசியாக 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிவு 2027 ஏப்ரல் மாதம் வெளியீடு: டிஜிட்டல் முறையில் தரவுகள் சேகரிப்பு
Published on

சென்னை,

இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு 1872-ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அடுத்து, 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட இருந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், நாட்டின் 16-வது மக்கள்தொகை கணக்கெடுப்பு, சுதந்திரத்திற்கு பிறகு நடத்தப்படும் 8-வது கணக்கெடுப்பு 2027-ம் ஆண்டு நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், மக்கள்தொகை கணக்கெடுப்பின் நோக்கம் குறித்த அறிவிப்பை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16-ந் தேதி மத்திய அரசு, அரசிதழில் வெளியிட்டது. தொடர்ந்து, ஜூலை மாதம் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் இந்த அறிவிப்பை தங்களது அரசிதழில் மறுவெளியீடு செய்ய அறிவுறுத்தப்பட்டது.

மக்கள்தொகை கணக்கெடுப்பு

அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி இந்தியா முழுவதும் நிர்வாக எல்லைகள் இறுதி செய்யப்பட்டன. முதற்கட்டமாக, வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுக்கும் பணி கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. இந்தப் பணிகள் செப்டம்பர் மாதம் நிறைவடைய உள்ள நிலையில், 2-ம் கட்டமாக மக்கள்தொகை கணக்கெடுப்பு லடாக் யூனியன் பிரதேசம் மற்றும் ஒத்திசைவற்ற பனிப்பொழிவு உள்ள பகுதிகளான ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசம், இமாச்சலபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் செப்டம்பர் மாதம் தொடங்க இருக்கிறது. அடுத்த ஆண்டு (2027) பிப்ரவரி மாதம் 2-வது கட்டமாக மக்கள்தொகை கணக்கெடுப்பு களப்பணி தொடங்குகிறது. ஏப்ரல் மாதத்திற்குள் இந்தப் பணிகளை முடித்து, அம்மாதமே உத்தேச மக்கள்தொகை எண்ணிக்கை விவரங்கள் வெளியிடப்பட இருக்கின்றன.

அடுத்த ஆண்டு நடைபெறும் மக்கள்தொகை கணக்கெடுப்பு முற்றிலும் டிஜிட்டல் முறையில் நடைபெற இருக்கிறது. அதாவது, டிஜிட்டல் தரவு சேகரிப்பு, சுய கணக்கெடுப்பு போர்டல், சாதிவாரி கணக்கெடுப்பு, புவிசார் குறியீட்டுடன் டிஜிட்டல் வரைபடங்கள், செயற்கை நுண்ணறிவு பயன்பாடு ஆகியவை புகுத்தப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com