மத்திய அரசிடம் தமிழக அரசு கோரியிருக்கும் நிவாரண தொகை ரூ.15 ஆயிரம் கோடி போதாது மு.க.ஸ்டாலின் பேட்டி

மத்திய அரசிடம், தமிழக அரசு கோரியிருக்கும் நிவாரண தொகையான ரூ.15 ஆயிரம் கோடி போதாது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மத்திய அரசிடம் தமிழக அரசு கோரியிருக்கும் நிவாரண தொகை ரூ.15 ஆயிரம் கோடி போதாது மு.க.ஸ்டாலின் பேட்டி
Published on

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:-கஜா புயல் குறித்து ஆய்வு செய்ய வந்துள்ள மத்திய குழு பற்றி தங்களின் கருத்து?.

பதில்:-ஆய்வு நடவடிக்கை குறித்து நான் ஏற்கனவே கூறியிருப்பது போல் உடனடியாகவும், முறையாகவும் நியாயமான முறையில் கஜா புயல் குறித்த ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்பது என்னுடைய அழுத்தமான நம்பிக்கை. அதைத்தான் நான் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கின்றேன். ஆனால், இப்போது ஆய்வு செய்துகொண்டிருக்கக்கூடிய நிலையை பார்க்கிற போது அந்தந்த பகுதியில் இருக்கக்கூடிய பொதுமக்களே, அவர்களிடத்தில் இரவிலே வந்து ஆய்வு செய்தால் நியாயமான ஆய்வை மேற்கொள்ள முடியாது என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை. அதுமட்டுமல்ல, குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் மட்டும் தான் தொடர்ந்து ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

அதனால், மற்றப் பகுதிகளில் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய மக்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். எது எப்படி இருந்தாலும் தமிழக அரசு மத்திய அரசிடம் கோரியிருக்கும் நிவாரண தொகை 15 ஆயிரம் கோடி ரூபாய். அந்த 15 ஆயிரம் கோடி ரூபாய் போதுமா என்றால் நிச்சயமாக போதாது. ஆகவே, இன்னும் அதிகம் நிதி ஒதுக்கி உடனடியாக நிவாரப்பணிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் மத்திய அரசு ஈடுபட வேண்டும். அதற்கு, தொடர்ந்து மாநில அரசு அழுத்தமாக குரல் கொடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கின்றேன்.

கேள்வி:-பிரதமர் நரேந்திரமோடி புயல் பாதித்த இடங்களை பார்வையிட தமிழகத்திற்கு இன்னும் வரவில்லை, அதைப் பற்றி தங்களின் கருத்து?.

பதில்:-பிரதமர் நரேந்திரமோடி இந்தியாவில் இருக்கிறாரா? அல்லது வெளிநாட்டில் இருக்கிறாரா? என்று தெரியவில்லை. ஒருவேளை, வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் எல்லாம் முடித்துவிட்டு ஓய்வு கிடைக்கிற போது வந்தால் வரலாம்.

கேள்வி:-கடந்த காலங்களில் தமிழகத்தில் ஏற்பட்ட புயல் பாதிப்பின்போது மாநில அரசு கேட்ட நிவாரண நிதியை மத்திய அரசு கொடுத்ததில்லை என்று கூறியுள்ளார்களே?

பதில்:-தந்ததே இல்லை என்று, அதையே குறைசொல்லிக் கொண்டிருப்பதை விட, இந்தச் சூழ்நிலையிலாவது மத்திய அரசு நிச்சயம் தர வேண்டும் என்பது தான் தி.மு.க. வலியுறுத்துகிற கோரிக்கை. இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com