மத்திய அரசின் நலத்திட்டங்கள் மக்களிடம் பாகுபாடின்றி சென்றடைய வேண்டும்: நயினார் நாகேந்திரன்

‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தின் முழுப் பலன்கள் தகுதியான பயனாளர்களை சென்றடைகிறதா என நயினார் நாகேந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
மத்திய அரசின் நலத்திட்டங்கள் மக்களிடம் பாகுபாடின்றி சென்றடைய வேண்டும்: நயினார் நாகேந்திரன்
Published on

சென்னை,

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

”சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, கிராமப்புற பொருளாதாரத்தை முன்னேற்றும் வகையில் நமது மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட ‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தில், தான் சிபாரிசு செய்யும் நபர்களுக்கு தான் வேலை கொடுக்க வேண்டுமெனக் கூறி, அத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே வேலை செய்து கொண்டிருக்கும் பெண்களிடம் தவெக நிர்வாகி ஒருவர் கத்தியைக் காட்டி மிரட்டியதாக வெளியாகியுள்ள காணொளி கடும் அதிர்ச்சியளிக்கிறது.

‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு சுமார் ரூ.2,000 கோடிக்கும் அதிகமான நிதி முதல் தவணையாக ஒதுக்கப்பட்டுள்ள நற்செய்தியை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையிலே, ஆளும் கட்சியைச் சேர்ந்த நிர்வாகியே இப்படியொரு கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவது கண்டனத்திற்குரியது மட்டுமன்றி திரு. ஜோசப் விஜய் அவர்களின் அரசின் மீதான நம்பிக்கையையே கேள்விக்குறியாக்குகிறது. முந்தைய திமுக ஆட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்ததையும், அதனால் பல கோடிக்கணக்கான பணம் முறைகேடு செய்யப்பட்டதையும் தமிழகம் இன்னும் மறக்கவில்லை. இவர்களைப் போன்ற நிர்வாகிகளால் தற்போதைய தவெக ஆட்சியிலும் ‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தின் முழுப் பலன்கள் தகுதியான பயனாளர்களை சென்றடையுமா என்ற சந்தேகம் எழுகிறது.

எனவே, ஆட்சியில் இருக்கும் ஆணவத்தில் அரசுப் பள்ளிகள், அரசு மருத்துவமனைகள், அரசு வேலைவாய்ப்புகள் உள்ளிட்டவைகளில் அளவில்லாமல் அட்டூழியம் செய்து கொண்டிருக்கும் தனது கட்சியின் ஆச்சரியக்குறிகளை கட்டுக்குள் வைப்பதோடு, நமது மத்திய அரசு வழங்கும் நலத்திட்டங்கள் எவ்வித பாகுபாடுமின்றி அனைத்து தமிழக மக்களையும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டுமென முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com