எல்லையில் கதறி அழுத மத்திய பாதுகாப்பு படை பெண் போலீஸ்

தனது வீட்டில் நகை திருடுப்போனதாக கொடுத்த புகாருக்கு காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
எல்லையில் கதறி அழுத மத்திய பாதுகாப்பு படை பெண் போலீஸ்
Published on

திருவலம்,

காட்பாடி தாலுகா பொன்னை அடுத்த நாராயணபுரம் பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி (வயது 65). இவரது மகள் கலாவதி (32). ஜம்மு காஷ்மீரில் மத்திய பாதுகாப்பு படை (சி.ஆர்.பி.எப்.) போலீசாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 24.6.2025 அன்று அதிகாலை குமாரசாமி தனது விவசாய நிலத்திற்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 25 பவுன் நகைகள் மற்றும் பணம் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.

இது குறித்து குமாரசாமி பொன்னை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வரும் அவரது மகள் கலாவதி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எங்கள் வீட்டில் எங்கள் அப்பா விவசாய நிலத்திற்கு சென்ற போது யாரோ வீட்டின் பூட்டை உடைத்து எனது திருமணத்திற்காக வைத்திருந்த 22 பவுன் நகைகள், பட்டு புடவை, மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தால் தாமதமாகவே வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தார்கள். ஆனால் இதுவரை நகையை கண்டுபிடித்து கொடுக்கவில்லை. எனது திருமணத்திற்காக வாங்கி வைத்த நகைகள் போய்விட்டது. எனக்கு யாருமே உதவவில்லை என சீருடையில் அழுதபடி வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com