

சேலம்,
மேட்டூர் அணையில் மத்திய நீர்வள ஆணைய உறுப்பினர் நேற்று திடீரென ஆய்வு செய்தார். அவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள மேகதாதுவை இன்று (சனிக்கிழமை) பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மாமல்லபுரம் அருகே கோவளத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தென்மாநில முதல்-மந்திரிகள் மாநாடு மற்றும் தென்மண்டல குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் தமிழக முதல்-அமைச்சர் விஜய், கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் உள்பட தென் மாநிலங்களின் முதல்-மந்திரிகள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் காவிரி நீர் பங்கீடு விவகாரம் மற்றும் மேகதாதுவில் அணை கட்டுவதில் தமிழகம், கர்நாடகாவில் நிலவும் இருமாநில பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய அரசின் ஜல்சக்தி திட்டத்தின் கூடுதல் செயலாளரும், மத்திய நீர்வள ஆணைய உறுப்பினருமான யோகேஷ் பைத்தங்கர் நேற்று மாலை மேட்டூர் அணைக்கு திடீரென வந்தார். பின்னர் அவர் நீர்வளத்துறை அதிகாரிகளுடன் அணையின் வலது கரையில் உள்ள பவளவிழா கோபுரத்தின் மீது சென்று அணையை பார்வையிட்டார்.
இதைத்தொடர்ந்து மேட்டூர் அணையில் தற்போது உள்ள நீர்மட்டம் எவ்வளவு? அணைக்கு வரும் நீரின் அளவு மற்றும் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் உள்ளிட்டவை குறித்து நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதையடுத்து மத்திய நீர்வள ஆணைய உறுப்பினர் யோகேஷ் பைத்தங்கர் தமிழக காவிரி நுழைவிடமான பிலிகுண்டுலுவுக்கு புறப்பட்டு சென்றார்.
தொடர்ந்து அவர் இன்று (சனிக்கிழமை) காலை கர்நாடக மாநிலம் மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட திட்டமிட்டு வரும் இடத்தை பார்வையிடலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இதுபற்றிய விவரத்தை தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்த முடியவில்லை என்று தெரிவித்தனர்.
முன்னதாக மேட்டூர் அணையில் மத்திய நீர்வள ஆணைய உறுப்பினர் யோகேஷ் பைத்தங்கர் ஆய்வு செய்தபோது, மேட்டூர் அணை செயற்பொறியாளர் வெங்கடாஜலம், உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி பொறியாளர் சதீஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.