கலவரத்தில் தீக்கிரையாக்கப்பட்ட மாணவர்களின் சான்றிதழ்கள் - மாவட்ட கலெக்டரிடம் கள்ளக்குறிச்சி எம்.பி. மனு

மாணவர்களின் சான்றிதழ்களை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கள்ளக்குறிச்சி எம்.பி. கவுதம சிகாமணி வலியுறுத்தியுள்ளார்.
கலவரத்தில் தீக்கிரையாக்கப்பட்ட மாணவர்களின் சான்றிதழ்கள் - மாவட்ட கலெக்டரிடம் கள்ளக்குறிச்சி எம்.பி. மனு
Published on

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில், மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் கடந்த 17-ந்தேதி நடந்த போராட்டத்தின் போது அங்கு கலவரம் வெடித்தது. இதையடுத்து பள்ளி வளாகம் முழுவதும் கலவரக்காரர்களால் சூறையாடப்பட்டது.

இந்த கலவரத்தில் பள்ளி நிர்வாகத்துக்கு சொந்தமான வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் சேதமடைந்தன. அதே சமயம் மாணவர்களின் சான்றிதழ்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களும் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன. இதனால் அந்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகுமோ? என்ற அச்சம் பெற்றோர்களிடையே நிலவி வருகிறது.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி எம்.பி. கவுதம சிகாமணி, இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து இந்த விவகாரம் தொடர்பாக மனு அளித்தார். அந்த மனுவில், பள்ளி கலவரத்தில் தீக்கிரையாக்கப்பட்ட மாணவர்களின் சான்றிதழ்களை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அந்த மாணவர்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்து கல்வி வழங்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com