தென் மாவட்டங்களில் 31-ந் தேதி மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு..!!

ஜனவரி மாதம் வரை பருவமழை நீடிக்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Published on

சென்னை,

கடந்த 3, 4-ந் தேதிகளில் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களையும், கடந்த 16, 17 மற்றும் 18-ந் தேதிகளில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களையும் மழை புரட்டி போட்டது. இதில் தூத்துக்குடி மாவட்டம் இன்னும் பாதிப்பில் இருந்து மீளவில்லை

வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி, டிசம்பர் மாதத்துடன் நிறைவு பெறும். ஆனால் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை பருவமழை நீடிக்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்று (28-12-2023) முதல் 31-ந் தேதி வரை சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், அதிலும் 31-ந் தேதி தென் மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று தமிழக கடலோர மாவட்டங்களில் சில இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், நாளை (29-12-2023) மற்றும் நாளை மறுநாள் (30-12-2023) தென் மாவட்டங்களில் சில இடங்களிலும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

31-ந் தேதி தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழையும், தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

நாளை (29-12-2023) குமரிக்கடல், தென்கிழக்கு மற்றும் அதனையொட்டிய தென் மேற்கு வங்கக்கடல் தெற்கு பகுதிகளிலும், நாளை மறுதினம் மற்றும் அதற்கு அடுத்த நாள் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளிலும் சூறாவளி காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வரை வீசக்கூடும் என்றும் மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com