தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம் உள்ளிட்ட தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. மேலும் பல இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியிலும், திருவண்ணாமலை மாவட்டம் கலப்பாக்கத்திலும் தலா 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

அதேபோல் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் 7 செ.மீ., ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் நா.புவியரசன் இணையதளத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், புதுக்கோட்டை ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன்கூடிய கனமழை பொழிய வாய்ப்புள்ளது. மேலும் கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை இன்று காலை மற்றும் மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com