

சென்னை,
வடகிழக்கு பருவமழை கடந்த 3 தினங்களாக தமிழகத்தில் வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையில் கடந்த 6-ந் தேதி நள்ளிரவு ஒரே நாளில் அதிகபட்சமாக 23 செ.மீ. மழை பதிவானது. அதன் தொடர்ச்சியாக சில மாவட்டங்களிலும் கன முதல் மிக கன மழை வரை பெய்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், வடகிழக்கு பருவமழையின் தீவிரம் நாளை மறுதினம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, புதுச்சேரி ஆகிய 8 மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்டா மாவட்டங்கள், காரைக்கால், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கோவை, தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி, ஈரோடு மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.