

சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் கடந்த வாரத்தில் தமிழகத்தில் பல இடங்களில் வறண்ட வானிலையே நிலவி வந்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் சில இடங்களில் மீண்டும் மழை பெய்ய தொடங்கி இருக்கிறது. ஓரிரு இடங்களில் கனமழையும் கொட்டுகிறது.
இந்த நிலையில் குமரி கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும் (வியாழக்கிழமை) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தமிழகத்தில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், தஞ்சாவூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் அனேக இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது.
சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.