தமிழகத்தில் நாளை அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

வடகிழக்கு பருவகாற்று காரணமாக தமிழகத்தில் நாளை (வியாழக்கிழமை) அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளை அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
Published on

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், வடகிழக்கு பருவகாற்று காரணமாக இன்று (புதன்கிழமை) முதல் 11-ந்தேதி (சனிக்கிழமை) வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

அதன்படி, இன்று கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா (தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்) மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

அனேக இடங்களில்...

நாளை (வியாழக்கிழமை) அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

நாளை மறுதினமும் (வெள்ளிக்கிழமை), 11-ந்தேதியும் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரையில், இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மழை அளவு

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், ஆய்க்குடி 10 செ.மீ., பெரியாறு 8 செ.மீ., தென்காசி, விராலிமலை, மோகனூர், செங்கோட்டை தலா 5 செ.மீ., சாத்தூர், பாலக்கோடு, மீமிசல் தலா 4 செ.மீ., அன்னவாசல், வந்தவாசி, பென்னாகரம், ஆவுடையார்கோவில், மருங்காபுரி, ஒகேனக்கல், தேக்கடி, ஓசூர், செங்கம், பூதபாண்டி தலா 3 செ.மீ. உள்பட சில இடங்களில் மழை பெய்திருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com