சந்திரயான்-2 நிலவில் இறங்குவதை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள் இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி

சந்திரயான்-2 நிலவில் இறங்குவதை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள் என இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார்.
சந்திரயான்-2 நிலவில் இறங்குவதை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள் இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி
Published on

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் சிவன், நிருபர்களிடம் கூறியதாவது:-

சந்திரயான்-2 நிலவை சுற்றி நீள்வட்டப்பாதையில் சென்றுகொண்டு இருக்கிறது. நீள் சுற்றுவட்டப்பாதையில் சென்று செப்டம்பர்(அடுத்த மாதம்) 7-ந்தேதி அதிகாலை 1.40 மணிக்கு தரை இறங்கும் முயற்சியை தொடங்கும். 1.55 மணிக்கு நிலவில் தரை இறங்கும்.

இது உலகத்தில் முக்கிய நிகழ்வாக இருக்கும். இதைத்தான் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். தரைஇறங்கும்போது 1.6 கிலோ மீட்டர் வேகத்தில் போய் கொண்டு இருக்கும். இந்த வேகத்தை முழுமையாக குறைக்கவேண்டும்.

இந்த பணி சற்று சவாலாக இருக்கும். இதை விஞ்ஞானிகள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கிறோம்.

இஸ்ரோவில் ஆண்-பெண் என்ற வித்தியாசம் கிடையாது. யார் திறமையானவர்களோ அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். சந்திரயான்-2வில் பெண்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. மேலும் செய்யப்பட உள்ள திட்டங்களிலும் பெண்கள் தலைமை ஏற்க கூடிய வாய்ப்புகள் இருக்கிறது.

சந்திரயான்-2வுக்கு பிறகு பல திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டு உள்ளோம். சந்திரயான்-2 மூலம் அடுத்த நாடுகளைவிட முன்னோக்கி செல்ல முடியும் என்று சொல்ல முடியாது. நம்முடைய குறிக்கோளை வெற்றிபெற செய்வதுதான் நம்முடைய இலக்கு. மற்ற நாடுகளை ஒப்பிடமுடியாது.

சந்திரயான்-2 நிலவில் தரை இறங்கும்போது இஸ்ரோவுக்கு பிரதமரை அழைத்து உள்ளோம். ஆனால் அவர் வருவது குறித்து எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com