'அரிசன் காலனி' அரசுப்பள்ளியின் பெயர் மாற்றம் - அமைச்சர் அன்பில் மகேஸ் அதிரடி

மல்லசமுத்திரம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியின் 'அரிசன் காலனி’ என்ற பெயரை அமைச்சர் அன்பில் மகேஸ் அழித்தார்.
'அரிசன் காலனி' அரசுப்பள்ளியின் பெயர் மாற்றம் - அமைச்சர் அன்பில் மகேஸ் அதிரடி
Published on

நாமக்கல்,

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று, நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியின் 'அரிசன் காலனி' என்ற பெயரை அழித்து, மல்லசமுத்திரம் கிழக்கு எனப் பெயர் மாற்றம் செய்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட 'ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி அரிசன் காலனி' எனும் பெயரினை 'ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மல்லசமுத்திரம் கிழக்கு' எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பது அவ்வூர் மக்களின் கோரிக்கையாக இருந்தது. இந்நிலையில் 'ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, மல்லசமுத்திரம் கிழக்கு' எனப் பெயர் மாற்றம் செய்வதற்கான அரசாணையை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆணைக்கிணங்க வெளியிட்டோம்.

தொடர்ந்து இன்று மல்லசமுத்திரம் கிராமத்திற்கு நேரடியாக சென்று 'அரிசன் காலனி' எனும் பெயரினை அழித்து, அரசாணையை பள்ளியின் தலைமையாசிரியரிடம் வழங்கினோம். இதற்காக போராடி வந்த ஊர் பெரியர் கணேசனுக்கு பொன்னாடை அணிவித்து மகிழ்ந்தோம்.

ஊர் மக்களின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்ற வழக்கறிஞர் அன்பழகனிடம் 'ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மல்லசமுத்திரம் கிழக்கு' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை அலைப்பேசி வாயிலாக தெரிவித்தோம். மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார். 'கல்வி மட்டுமே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம்' - மு.க. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com