முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்ட மெனுவில் மாற்றம்

கோப்புப்படம்
பள்ளி திறப்புக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளிக்கல்வித்துறை எடுத்து வருகிறது
சென்னை,
தமிழ்நாட்டில், கடந்த ஏப்ரல் 25-ம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. வெயில் அதிகரிப்பால், பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகும் என கூறப்பட்ட நிலையில், தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மிதமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த சூழலில் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில், திட்டமிட்டப்படி நாளை மறுநாள் (ஜூன் 2 ஆம் தேதி) ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பள்ளி திறப்புக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளிக்கல்வித்துறை எடுத்து வருகிறது.
இந்நிலையில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்ட மெனுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி பள்ளிகள் திறப்பான ஜூன் 2-ம் தேதி அன்று பொங்கல் + காய்கறி சாம்பார் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரிசி உப்புமா வழங்குவது நிறுத்தம் செய்யப்படுவதாகவும், வாரத்தில் இரு தினங்கள் திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் பொங்கல் வழங்கப்பட வேண்டும் என்றும், திங்கட்கிழமைகளில் வழங்கப்பட்டு வந்த கோதுமை ரவை உப்புமா இனி வியாழக்கிழமைகளில் வழங்கப்படும் என்றும் சமூக நலத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
முன்னதாக தமிழ்நாட்டில் பள்ளி குழந்தைகளுக்காக காலை உணவுத் திட்டம் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. அதன்பிறகு ஊரகப் பகுதிகளில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் தமிழகத்தில் உள்ள 30,992 அரசு பள்ளிகளிலும், ஊரகப் பகுதிகளில் உள்ள 3,995 அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், 17.53 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
இதனிடையே, நடப்பு கல்வியாண்டு முதல் நகர்ப்புறங்களில் இயங்கி வரும் 1,545 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 1.14 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில், காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.