

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பிளஸ்-2 மாணவி ஒருவர் அங்குள்ள காட்டுப்பகுதியில் கடந்த 11-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த வழக்கில் பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர். 100-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அறிவியல்பூர்வமாக இந்த வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
பல்வேறு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு டி.என்.ஏ. பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்த தர்மமுனீசுவரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரது டி.என்.ஏ.வுடன், கொலை செய்யப்பட்ட பிளஸ்-2 மாணவியிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரியில் இருந்த டி.என்.ஏ.வுடன் ஒத்துப்போனது. இதனால் போலீசார் வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை முழுமையாக தயாரிக்கப்பட்டது. அதனை விசாரணை அதிகாரியான விளாத்திகுளம் டி.எஸ்.பி. சுந்தரபாண்டியன், நேற்று தூத்துக்குடி போக்சோ கோர்ட்டில் தாக்கல் செய்தார். பிளஸ்-2 மாணவி கொலை சம்பவம் நடந்து 20 நாட்களில் குற்றவாளி கைது செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகையும் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வருகிற 2-ம் தேதி தர்மமுனீசுவரன் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். அப்போது, அவருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.