

தென்காசி,
கடந்த 12-ம் தேதி நெல்லையிலிருந்து செங்கோட்டைக்குச் சென்ற பயணிகள் ரெயிலில் கீழப்பாவூர் பகுதியைச் சேர்ந்த சாந்தி என்பவர் பயணம் செய்தார். ரெயில் தென்காசி ரெயில் நிலையத்தை வந்தடைந்தபோது, அதே பெட்டியில் இருந்த மர்ம நபர் ஒருவர் திடீரென சாந்தியின் கழுத்தில் இருந்த நகையைப பறிக்க முயன்றுள்ளார். சாந்தி கூச்சலிடவே, பிடிபடுவோம் என்ற பயத்தில் அந்த நபர் ரெயிலிலிருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டார்.
பாதிக்கப்பட்ட சாந்தி அளித்த புகாரின் பேரில், தென்காசி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ரெயில்வே டி.எஸ்.பி. லட்சுமணன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் விசாரணையில் நகை பறிக்க முயன்றவர் தென்காசி மாவட்டம் குற்றாலம் கீழரத வீதியைச் சேர்ந்த கருப்பசாமி (வயது 55) என்பது தெரியவந்தது. இவர் குற்றாலம் குற்றாலநாதர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் தமிழ் புலவராகப் பணியாற்றி வருவது உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து கருப்பசாமியைப் போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். கைதான அவர் மீது காவல்துறை நடவடிக்கையை தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஊழியரே ரெயிலில் நகை பறிக்க முயன்ற சம்பவம் சக பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபப்பை ஏற்படுத்தியது.