பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் 18-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
Published on

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் 18-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

விநாயகர் சதுர்த்தி விழா தொடக்கம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் நடைபெறும். இந்த விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

காலை 10 மணிக்கு கொடி கோவிலை சுற்றி வந்தது. 11 மணிக்கு கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு விழா தொடங்கியது. முன்னதாக கொடிமரம் அருகே வெள்ளி மூஷிக வாகனத்தில் உற்சவர் கற்பகவிநாயகரும், வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேசுவரரும் எழுந்தருளினர். கொடிமரத்திற்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

முதல் நாள் திருவிழாவான நேற்று கற்பகவிநாயகர் மூஷிக வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தார். 2-ம் நாள் திருவிழாவான இன்று(திங்கட்கிழமை) இரவு சிம்ம வாகனத்திலும், 12-ந்தேதி பூத வாகனத்திலும், 13-ந்தேதி கமல வாகனத்திலும், 14-ந்தேதி இரவு ரிஷப வாகனத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.வருகிற 15-ந்தேதி மாலை 6 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. 16-ந்தேதி மயில் வாகனத்திலும், 17-ந்தேதி குதிரை வாகனத்திலும் கற்பகவிநாயகர் வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தேரோட்டம்

இதேபோல் 18-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. முன்னதாக அன்றைய தினம் மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கிறார். ஆண்டிற்கு ஒரு நாள் மட்டுமே இவ்வாறு மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சியளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 19-ந்தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தன்று தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. அன்றைய தினம் பகலில் மூலவருக்கு மோதகம் படையல் நிகழ்ச்சியும், இரவு 11 மணிக்கு பஞ்சமூர்த்தி சுவாமிகள் புறப்பாடும் நடக்கிறது. இத்துடன் சதுர்த்தி விழா நிறைவு பெறுகிறது.

விழாவில் கலை நிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவுகள் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் கண்டவராயன்பட்டி தண்ணீர்மலை செட்டியார், காரைக்குடி சாமிநாதன் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com