கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை

மதுராந்தகம் அருகே கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ளது சிலாவட்டம் கிராமம். இங்கு உள்ள குளத்தின் அருகே உள்ள வேப்பமரத்தில் நேற்று காலை ஒரு வாலிபர் மற்றும் இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் காணப்பட்டனர்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இது குறித்து மதுராந்தகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணையில், அவர்கள் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த அருள்ஜோதி (23) மற்றும் அவருடைய பெரியப்பா மகன் ரமேஷின் மனைவி முத்துலட்சுமி(35) என்பதும் அவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்து வந்ததும் தெரியவந்தது.

அருள்ஜோதி சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இருவரும் கடந்த 4-ந்தேதி சென்னை வந்துள்ளனர். அருள்ஜோதிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. முத்துலட்சுமிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மதுரையை சேர்ந்த கள்ளக்காதல் ஜோடி மதுராந்தகம் அருகே தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com