செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று முதல் நவீன பெட்டிகளுடன் இயக்கம்

செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பயண நேரம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று முதல் நவீன பெட்டிகளுடன் இயக்கம்
Published on

சென்னை,

திருச்செந்தூர்- சென்னை இடையே இருமர்க்கத்திலும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் தினசரி இயக்கப்படுகிறது. இந்த ரெயில் சென்னை எழும்பூரில் இருந்து (வண்டி எண் 20605) மாலை 4 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்கு திருச்செந்தூரை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து (20606) இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.25 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடைகிறது.

நெல்லை-திருச்செந்தூர் இடையிலான தண்டவாளம் மின்சார வழித்தடமாக மாற்றியதால் மின்சார ரெயில் கொண்டு இயக்கப்பட்டு வருகிறது. மேலும் ரெயில் நிலையங்களில் பிளாட்பாரங்கள் நீட்டிப்பு காரணமாக பெட்டிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது.

நவீன பெட்டிகள்

இந்த நிலையில் இந்த ரெயிலுக்கு நவீன எல்.எச்.பி. பெட்டிகள் இணைக்கப்படுகிறது. இன்று (திங்கட்கிழமை) முதல் சென்னை- திருச்செந்தூர் ரெயிலில் நவீன பெட்டிகள் இணைக்கப்படுகிறது. திருச்செந்தூரில் இருந்து நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் இந்த நவீன பெட்டிகளுடன் ரெயில் இயக்கப்படுகிறது.

இதுவரை இந்த ரெயில் பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 23 பழைய பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வந்தது. இனி மேல் 21 நவீன பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. அதாவது 1 முதல் வகுப்பு ஏ.சி. பெட்டி, 3 மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகள், 2 இரண்டடுக்கு ஏ.சி. பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள், 1 மாற்றுத்திறனாளி பெட்டி, 1 ஜெனரேட்டர் பெட்டி ஆகியவை இணைக்கப்பட்டிருக்கும்.

பயண நேரம் குறையும்

எல்.எச்.பி. பெட்டிகள் எடை குறைந்த, இலகு ரக, அதே நேரத்தில் உறுதியாகவும் அதிவேகமாகவும் பயணிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டு உள்ளது. செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் தற்போது சென்னை எழும்பூர் -திருச்செந்தூர் இடையே 775 கிலோ மீட்டர் தூரத்தை (தஞ்சாவூர் வழி-மெயின் லைன்) கடந்து செல்ல 14 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது. இதற்கான வேகம் மணிக்கு 90 கிலோ மீட்டர் வரை அனுமதிக்கப்பட்ட போதிலும் சராசரியாக 55.35 கிலோ மீட்டர் வேகம் தான் இயக்கப்பட்டு வருகிறது.

இனிமேல் இந்த ரெயிலுக்கான வேகம் 110 கிலோ மீட்டருக்கு அனுமதிக்கப்படுகிறது. இதன் மூலம் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பயண நேரம் குறையும் என்று தெரிகிறது.

பயணிகள் கோரிக்கை

அதே நேரத்தில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளின் எண்ணிக்கை 11-ல் இருந்து 9 ஆக குறைக்கப்பட்டு உள்ளதால் பயணிகள் எண்ணிக்கை இதில் 72 வரை குறையும் என்று தெரிகிறது. எனவே பழைய எண்ணிக்கையில் பயணிகளை அழைத்துச்செல்லும் வகையில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கூடுதல் பெட்டி இணைக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com